
கருவறையின் சுவரை
தட்டிப் பார்த்தேன்
முட்டிப் பார்த்தேன்
மோதிப் பார்த்தேன்
திறக்கவில்லை
நீண்டதொரு யுத்தம்
இரத்தச் சகதியில்
இன்னுமொரு பிறப்பு
தொப்புள்கொடி நோ
தீருமுன்னே
வாரியணைத்தாள் அன்னை
முத்தமிட்டாள் என்னை
பித்தம் கொண்டேன்
தாய் மீது
தாய்மை மீது
எனக்கும் காதல் வந்தது
புலம்பெயர்ந்து
அகம் இழந்து
மொழி தொலைந்து
எதிலியானோம்
சொந்தங்கள்
சொர்க்கத்தில்
சொந்த பூமியோ
நரகத்தில்
விடிவு வரும்
நாளையென்று
வாடித்தவித்து
வருடங்கள் ஓடுதடி
தமிழ் மறந்து
தாயகம் துறந்து
தெரியாத தேசத்தில்
புரியாத வாழ்க்கை
கணணியில் கண்டு
கணவனும் மனைவியும்
காலந் தள்ளும்
கேவலங்கள்
காதலும் காமமும்
சங்கமிக்கும்
முடிவிலியில்
கலாச்சாரம்
அடையாளம் தெரியாத
விதிமுறைகள் பிழையான
அவசர உலகத்தில்
அகதியாய் எம் வாழ்வு
தொலைவினில் நிலவு
தாலாட்டும் இசை
மகிழ்ச்சியில் இவ்வுலகு
பறவைகள் இல்லை
ஒலியற்ற நிசப்தம்
விண்மீனோடு வெளிச்சம்
உறைகின்ற பொழுது
வானில் வெண்ணிலா
எங்கே என் நிலா
திரை மறைவில் நீ
திசை தெரியாமல் நான்
அலையோசை தூரத்தில்
அவள் உறங்கும் நேரத்தில்
தமிழோடு உறவாடும்
எந்தன் விரல்கள்..