Thursday, March 01, 2012

உந்தன் விழியோர கருமையில்



சித்தத்தில் முத்தமிட்டு
சிகரத்தில் இல்லம்கொண்டு
கலைவாணியும் தலை நாண
கம்பன் கவிகள் உனைப்பாட
பிரம்மனும் வியந்து படைத்த
பெண்ணழகே பேரழகே


காற்றோடு விளையாட மரமுண்டு
காலத்தோடு உறவாட வயதுண்டு
கண்களோடு இசைபாட நிலவுண்டு
காதலோடு எனைப்பாட நீயின்றி
இவ்வுலகில் யாருண்டு


ஏழுகடல் ஏழுமலை தாண்டிவரவா
எதிரியையும் நண்பனாய் மாற்றிவிடவா
உலகத்தையே உனக்காய் சுற்றிவரவா
உயிரோடு முக்தி அடைந்துவிடவா


உன்னை நினைக்காத ஓர்நொடி
இல்லாமல் நாட்கள் நகருதடி
உறங்கும்போதும் உளறுகின்றேன்
இரவினில் எழுந்து தேடுகிறேன்


வறுமைக்கு முடிவு செல்வத்தில்
வானுக்கு முடிவு ஆழ்கடலில்
வாழ்வுக்கு முடிவு மரணத்தில்
எந்தன் பயணத்தின் முடிவு
உந்தன் விழியோர கருமையில்

Thursday, February 23, 2012

எனக்கும் காதல் வந்தது


கருவறையின் சுவரை 
தட்டிப் பார்த்தேன்
முட்டிப் பார்த்தேன்
மோதிப் பார்த்தேன்
திறக்கவில்லை
நீண்டதொரு யுத்தம்
இரத்தச் சகதியில்
இன்னுமொரு பிறப்பு
தொப்புள்கொடி நோ
தீருமுன்னே
வாரியணைத்தாள் அன்னை
முத்தமிட்டாள் என்னை
பித்தம் கொண்டேன்
தாய் மீது
தாய்மை மீது
எனக்கும் காதல் வந்தது 

சிறகொடிந்த பறவையாய்

புலம்பெயர்ந்து
அகம் இழந்து
மொழி தொலைந்து
எதிலியானோம்

சொந்தங்கள் 
சொர்க்கத்தில்
சொந்த பூமியோ
நரகத்தில்

விடிவு வரும்
நாளையென்று
வாடித்தவித்து
வருடங்கள் ஓடுதடி

தமிழ் மறந்து
தாயகம் துறந்து
தெரியாத தேசத்தில்
புரியாத வாழ்க்கை

கணணியில் கண்டு
கணவனும் மனைவியும்
காலந் தள்ளும்
கேவலங்கள்

காதலும் காமமும்
சங்கமிக்கும்
முடிவிலியில்
கலாச்சாரம்

அடையாளம் தெரியாத
விதிமுறைகள் பிழையான
அவசர உலகத்தில்
அகதியாய் எம் வாழ்வு

Thursday, February 09, 2012

நள்ளிரவில் உந்தன் சொப்பனங்கள்

அழகிய இரவு
தொலைவினில் நிலவு
தாலாட்டும் இசை
மகிழ்ச்சியில் இவ்வுலகு

பறவைகள் இல்லை
ஒலியற்ற நிசப்தம்
விண்மீனோடு வெளிச்சம்
உறைகின்ற பொழுது

வானில் வெண்ணிலா
எங்கே என் நிலா
திரை மறைவில் நீ
திசை தெரியாமல் நான்

அலையோசை தூரத்தில்
அவள் உறங்கும் நேரத்தில்
தமிழோடு உறவாடும்
எந்தன் விரல்கள்..

Monday, November 21, 2011

முப்பொழுதும் உன் கற்பனைகள்


இரும்பாய் இருந்த இதயத்தில்
குறிஞ்சி மலராய் பூத்தவளே
இருண்ட எந்தன் தேசத்தில்
முழுநிலவாய் உதித்தவளே
வீசும் காற்றிலும்
கேட்கும் பாட்டிலும்
திரும்பிய திசையிலும்
திரும்பாத நொடியிலும்
தெரிவது நீயடி

எந்தன் மொழியை
எந்தன் இசையை
எனக்கே அறிமுகம் செய்தவளே
எந்தன் மண்ணின்
எந்தன் தாயின்
அருமை புரிய வைத்தளே
உந்தன் தமிழால்
உந்தன் கவியால்
உந்தன் சிரிப்பால்
உந்தன் பேச்சால்
எனது மதுரை
எரியுதடி

எந்தன் நேசம் சொல்ல
நேரம் போதவில்லை
உண்மை தெரிந்துகொள்ள
உனக்கும் காலம் இல்லை
கலைந்து போகும் மேகமாய்
கடந்து நீ சென்றாலும்         
காலங்கள் உள்ளவரை
நீயொரு தேவதை

கடலின் இசையில் கலந்தவன்
அலைகளின் ஓசையை வெறுக்கிறேன்
அன்று நிலவின் ஒளியை ரசித்தவன்
இன்று நிலவிலும் உன்முகம் பார்க்கிறேன்
மலையிலும் காட்டிலும் திரிந்தவன்
மனச்சிறையில் வாடிக்கிடக்கிறேன்

உன்னோடு கைகோர்த்து ரசித்த கடலும்
உன்னோடு இணைந்து லயித்த நிலவும்
அழகோடு உறவாடும் அந்திப் பொழுதும்
இந்த வாழ்வின் எல்லைவரை நீளாதா
இறைவா இன்னோர் பிறவிவேண்டாம்
இந்தப் பிறவியே எனக்குப்போதும்
இறைவா இன்னோர் மையல் வேண்டாம்
இந்த நினைவுகளே என்றும் போதும்